mercredi 13 novembre 2013

நான் போட்ட உடுப்பு

நான் போட்ட உடுப்பு 




இடுப்பைத் தொடும் தலைமயிருடனும்
அதில் ,
சின்னஞ் சிறு அலரிப் பூவுடனும்
மிடியுடனும்  புறொக்குடனும்
இல்லாவிட்டால்  ,
ஹாஃப் சாறிடனும் பஞ்ஞாபியுடனும் 
வளைய வந்த எனது பெண்களில் ,
நான் கொஞ்சம் வித்தியாசமானவள் !!!!

நான் அணிந்த உடைகள்
நான் விரும்பி அணிந்த உடைகள் !!!!
இந்த உடைகள்
என்னைப் போன்ற
பல பெண்களின்
அடிமை வாழ்வை உடைத்தெறியும் .......
அதில் ,
எனது நாடி நரம்பெலாம் ஓடி நிக்கும்
எனது சொந்த மண்ணும்
ஒருநாள் விடுதலை பெறும் ...
அதுவரை ,
நித்திரை என் அகராதியில் இல்லை ....

மைத்திரேயி
13 கார்த்திகை 2013

jeudi 7 novembre 2013

மைத்திரேயியின் சமையல்கட்டு 06 ( மரவள்ளி கிழங்கு புட்டு )

மரவள்ளி கிழங்கு புட்டு




இப்ப இருக்கிற ஆக்கள் கூடுதலாய் மாவிலைதான் புட்டு அவிப்பினம் . பருத்திதுறையிலை மரவள்ளிக் கிழங்கிலையும் புட்டு அவிக்கிறவை . மரவள்ளிக் கிழங்கு கஸ்ரப்பட்ட ஆக்களின்ரை சாப்பாட்டு எண்டு இப்ப பெரிசாய் ஒருத்தரும் அதை மதிக்கிறேலை . எங்கடை பழைய ஆக்கள் மரவள்ளிக் கிழங்கை சாப்பிட்டே நல்ல சுக நயமாய் இருந்தவை . எனக்கு தெரிஞ்சு இதிலை புட்டு அவிக்கிறது குறைவு ஆனால் நல்ல சத்தான சாப்பாடு .

என்ன வேணும் :

மரவள்ளிக் கிழங்கு 1 கிலோ
பனங்கட்டி 1 - 3 குட்டான்
ஏலக்காய் 4-5 ( தேவையான அளவு )
பட்டர் அல்லது நெய் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

கூட்டல் :

மரவள்ளிக் கிழங்கை கொஞ்ச நேரம் மெதுவான சுடுதண்ணியிலை ஊறவிட்டு மண்ணை கழுவுங்கோ மரவள்ளிக் கிழங்கை 2- 3 துண்டாய் வெட்டி தோலை உரியுங்கோ வெட்டின கிழங்கை ஸ்கிறைப்பறிலை தேச்சு சின்ன துருவல் ஆக்குங்கோ ஒரு புட்டுப் பானையிலை மரவள்ளிக் கிழங்கு துருவலை போட்டு ஒரு 20 நிமிசத்திலை இருந்து 30 நிமிசம் வரை அவியுங்கோ மரவள்ளிக் கிழங்கு துருவல் அவிஞ்ச உடனை சூட்டோடை உப்பு ஏலக்காய் பட்டர் எல்லாத்தையும் போட்டு கலவுங்கோ இப்ப நீங்கள் சத்தான புட்டு சாப்பிடலாம்


மைத்திரேயி

07/11/2013