சீனியம்மா
என்னைப்பெற்றது என் அம்மாவானாலும்
சிறுவயதில் உன்மடிதானே என் இடம்
என் சீனியம்மா ....
நான் சிரிக்கப் பேசி சின்னக் கதை சொல்லி
சித்திரமாய் என்னை வளர்த்தாய்
உன்கை பிடித்தே
நான் பள்ளிக்கூடம் செல்லும்பொழுது
உலகமே என்கால் அடியில்.......
காலம் என்ற நதியில்
கரைபுரண்ட வெள்ளத்தில்
நீயும் நானும் மல்லுக்கட்டினோம் .....
ஒவ்வரு வருடமும் இங்கு
தோல் உரிந்து முடி உதிர்ந்து
குளிர் வேளையில் உறையும்
ஃபைன் மரங்கூட வெய்யில்பட
புதுப்பெண் போல் பொலிவு பெறும்....
குருவிகளும் தேன் வண்டுகளும்
ஃபைன் மரத்தை சுத்திவர ,
உனக்கும் எனக்கும் மட்டும்
ஏன் சீனியம்மா
கலண்டரில் கிழிஞ்ச கடதாசி போல்
பொலிவு இழக்கின்றோம் ?????
காலம் கிழித்த கலண்டரில்
எங்களுக்கு மட்டும்
ஏன் இரக்கம் இல்லை ????
என் சீனியம்மா
மீண்டும் சின்னக் குழந்தையாய்
பாயிலே படுத்துப் போனாள் .....
நான் வருகிறேன் சீனியம்மா
உன் அருகில் நான் வருகின்றேன்
மீண்டும் பொறுப்பான மகளாக !!!!!!!!!
மைத்திரேயி
04/04/2013